புத்ராஜெயா இந்தியர் அரசு பணியாளர் சங்கமான இமயத்தின் ஏற்பாட்டில் புத்ராஜெயா, தேவி ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
இமயத்தின் தலைவர் டாக்டர் P. முரளிதரன் முன்னிலையில் புத்ராஜெயா இந்தியர் அரசு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்ட 2024 ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழாவிற்கு ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகை புரிந்தார்.
புத்ராஜெயா இந்திய அரசு பணியாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இமயம், இந்திய பணியாளர்களின் ஒற்றுமையை முன்னிறுத்தி, அவர்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடத்தி வருகின்றது.
.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் விழா, வரலாற்றுச்சிறப்பு மிக்க, நாட்டின் நிர்வாக மையமாக விளங்கும் புத்ராஜெயாவில் இந்தியர்களின் நில அடையாளமாக விளங்கும் தேவி ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் விமரிசையாக நடைபெற்றது.
பொங்கல் விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்திய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி, துணை அமைச்சர் என்ற முறையில் இந்த ஆலயத்தில், இமயம் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும் என்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக கலந்து கொண்ட போது, இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வரும் தேவி ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தின் திருப்பணியை முடித்துக்கொடுப்பதற்குரிய ஆக்கப்பணிகளை செய்வேன் என்று உறுதி ளித்து இருந்தேன்.
அதேபோன்று இந்த முறை ஒற்றுமைத்துறை துணை அமைச்சராக வந்திருந்த போதிலும் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, திருப்பணி நடைபெறுவதை ஒரு கடமையாக கொண்டுள்ளேன். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தில் நடப்பு அரசாங்கம் வேண்டிய உதவிகளை இந்த ஆலயத்திற்கு நல்கும் அதேவேளையில் ஆலயம் கட்டி முடிக்கப்படுவதை பெரும் பொறுப்பாக கொள்வேன் என்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உறுதி அளித்தார்.
முன்னதாக அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்திய இமயத்தின் தலைவர் டாக்டர் முரளிதரன், புத்ராஜெயாவில் பணியாற்றும் இந்தியர் அரசு பணியாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு, கடந்த காலங்களில் பொங்கல் விழ உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கத்தின் அபிலாசைக்கு ஏற்ப இந்திய அரசு பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் புரிந்துணைர்வை வலுப்படுத்தும் நோக்கில் முதல் முறையாக ஒற்றுமை பொங்கல் விழா நடத்தப்படுவதாக தமது உரையில் தெரிவித்தார். மதியம் 12.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த ஒற்றுமை பொங்கல் விழாவில் அரசு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.








