Mar 30, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவர்கள் மத்தியில் நீர் நிர்வகிப்பு முறை மீதான விழிப்புணர்வு: நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்கள் மத்தியில் நீர் நிர்வகிப்பு முறை மீதான விழிப்புணர்வு: நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், நவ. 15-


நாட்டில் நீர் நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு நீர் நிர்வகிப்பு முறை மீதான விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை இலக்காக கொண்டு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்படும் என்றார் அவர்.

வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பள்ளி ஒன்றில் இந்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையை ஸ்பான் அதிகாரப்பூர்வமாக தொடங்கவிருப்பதாக சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வீட்டிலும் நீர் நிர்வகிப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டும், நீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது, மழை நீரை சேமித்து எத்தகைய உபயோகங்களுக்கு பயன்படுத்த முடியும் முதலிய விழிப்புணர், மாணவர்கள் மூலமாக குடும்ப உறுப்பினர்களுக்கு போதிப்பதற்கு மாணவர்களை இலக்காக கொண்டு இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாடு சராசரி நான்கு, ஐந்து மணி நேரத்திற்கு பெய்யக்கூடிய கனத்த மழையில் 45 மில்லிமிட்டர் மழையளவை பதிவு செய்தது. தற்போது, ஒரு மணி நேரத்தில் பெய்யக்கூடிய கனத்த மழையில் 50 மில்லி மீட்டராகவும், 3 மணி நேரம் பெய்யக்கூடிய மழையில் 150 மில்லிமீட்டராகவும் மழையளவை நாடு பெறுகிறது.

ஒரே நேரத்தில் கனத்த மழை, அளவுக்கு அதிகமான நீர், அதன் பின்னர் மழையின்றி நீண்ட வறட்சி என்ற அளவில் நாட்டின் சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சவால்களினால் 6 மாதம் வரை மழை பெய்யாத நிலையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் மலேசியா மட்டுமின்றி உலக நாடுகள் பல, நீர் நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளன.

அனைவரது மத்தியிலும் தற்போது நீரின் பாதுகாப்பு, முக்கிய கவலையாக இருந்து வருகிறது. எனவே ஒரு குடும்பத்தில் நீரை எந்தெந்த வகையில் சிக்கனப்படுத்த முடியும் என்பது மீதான விழிப்புணர், முதலில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

15 ஆயிரம் மாணவர்களை இலக்காக கொண்டு தமிழ், சீனம் மற்றும் தேசியப் பள்ளிகளில் நீர் நிர்வகிப்பு முறை மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

இன்று மதியம், கோலாலமபூர் பங்சாரில் ஸ்பான் நடத்திய ஊடகவியலாளர்களுடனான நல்லிணக்க சந்திப்பு விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்பான் தலைவரான சார்ல்ஸ் சந்தியாகோ இதனை தெரிவித்தார்.

SPAN- க்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நல்லுவை ஏற்படுத்தும் வகையில் ஸ்பான் நடத்திய இந்த நிகழ்வில் இதுநாள் வரையில் ஸ்பான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஊடகவியலாளர்களுக்கு சார்ல்ஸ் சந்தியாகோ தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related News