மலேசியாவில் இவ்வாண்டில் ஹீட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்துடன் தொடர்புடைய மொத்தம் 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் வாகனத்தில் தனியாக விடப்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவமும் அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கடும் வெப்ப நிலை காரணமாக அனைவரும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்று இன்று திங்கட்கிழமை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஹீட்ஸ்ட்ரோக்-இன் ஆரம்ப அறிகுறிகளாக நீண்ட நேரம் தலைச்சுற்றல், அதிக தாகம், உடல் வெப்பநிலை உயர்வு போன்றவை காணப்படும்.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நிழலான இடத்திற்கு சென்று, அதிக அளவில் தண்ணீர் அருந்துவதோடு, உடலை குளிர்விக்க வேண்டும் என்றும் சுல்கிப்ளி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், குழந்தைகள் உட்பட எவரையும் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வாகனங்களில் தனியாக விட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








