கோலாலம்பூர், பிப்ரவரி.20-
தன் மீது சுமத்தப்பட்டுள்ள 2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட இரண்டு முறைகேடு புகார்கள் குறித்து பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி இன்று இரவு விரிவான விளக்கமளிக்க உள்ளார்.
சமூக ஊடகப் பிரபலவரான அரிஸ் ரம்லி அல்லது 'Caprice” சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, இன்று இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘Yang Berhenti Menteri – YBM” எனும் நேரலை நிகழ்ச்சியில் ரஃபிசி பதிலளிக்கவுள்ளார்.
நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ரஃபிசி, 'UEM Lestra’ நிறுவனத்தின் 750 மெகாவாட் அளவிலான பெரிய அளவிலான தனியார் சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக கேப்ரிஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், தாம் முன்னர் தலைமை வகித்த பொருளாதார அமைச்சகத்துடன் தொடர்புடையவை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"என்னுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கு நான் ஒப்பந்தம் வழங்கியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது கேப்ரிஸால் பரப்பப்படும் மற்றொரு அவதூறு," என்று ரஃபிசி கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை, ரஃபிசி தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்த போதிலும், கேப்ரிஸ் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தான் எழுப்பிய கேள்விகளுக்கான ஆதாரங்களாக சில ஆவணங்களையும் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.








