வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெஜுவாங் கட்சி வேட்பாளர்களைக் களம் இறக்கும் என்று அதன் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இம்முறை அதிக இடங்களைக் கைப்பற்றப் போட்டியிடப் போவதில்லை என்றும், தங்களின் சொந்தத் திறமை மற்றும் வசதிகளுக்கு ஏற்பவே போட்டியிடப் போவதாகவும் அவர் கூறினார். மற்ற அரசியல் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தங்களின் அரசியல் நட்பு கட்சிகளுடன் நேரடி மோதலைத் தவிர்ப்பதே தங்களின் நோக்கம் என்றும், இதுவரை மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவால் தோற்றுவிக்கப்பட்ட பெஜுவாங் கட்சிக்கு, தற்போது நாடாளுமன்றத்திலோ அல்லது மாநிலச் சட்டமன்றங்களிலோ எந்த இடங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.








