புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.05-
வணிக வளாகங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தும் நடைமுறையை மாநில அரசாங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என்று சமய விவகார அமைச்சர் சுல்கிப்ளி ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.
புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத் துறை மற்றும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்றம் இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது IOI City Mall, Alamanda Shopping Centre மற்றும் Suria KLCC உள்ளிட்ட பல வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் பல இடங்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்மாத்தாங் பாவ் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுல்கிப்ளி ஹசான், இம்முயற்சியில் மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தாங்கள் ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.








