சிரம்பான், ஜூலை.05-
நெகிரி செம்பிலானில் உள்ள தாமான் பஞ்சோர் ஜெயா பகுதியில் நடைபெற்ற ' Ops Samseng Jalanan' சோதனையின் போது, சாலைத் தடுப்பை மீறி தப்ப முயன்ற 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் போலீஸ் அதிகாரி மீது வாகனத்தை மோதிக் காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் தலை, வலது கணுக்கால், வலது கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு Tuanku Ja'afar மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, போதைப்பொருள் பரிசோதனையில் மாணவர்கள் இருவருக்கும் எதிர்மறை முடிவுகள் வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகனத்தை ஓட்டிச் சென்ற 14 வயது மாணவரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








