கோலாலம்பூர், ஜூலை.05-
NSM தாக்குதல் ஏவுகணை ஒப்பந்த இரத்து விவகாரத்தில், மலேசியா கோரியுள்ள 1.06 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு தொடர்பாக, நார்வேயைச் சேர்ந்த Kongsberg Defence & Aerospace நிறுவனம், மலேசிய அரசாங்கத்தைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
எனினும், இந்த பேச்சு வார்த்தையை இழப்பீடு வழங்கும் செயல்முறையை தாமதப்படுத்தும் உத்தியாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருந்தாலும் கூட, இழப்பீட்டு கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், அவர்கள் விரிக்கும் வலையில் சிக்காமல் தாங்கள் மிகுந்த விழிப்புடன் கையாள்வதாகவும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் ஏவுகணை ஒப்பந்தம் இரத்து காரணமாக, மலேசியா கோரியுள்ள 1.06 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டில், 129.86 மில்லியன் யூரோ அதாவது மலேசிய மதிப்பில் 609 மில்லியன் ரிங்கிட் என்பது அரசாங்கம் ஏற்கனவே செலுத்திய தொகையை உள்ளடக்கிய நேரடி இழப்புகளுக்காக கோரப்பட்டுள்ளது.
மேலும், ஏவுகணை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிற சேதங்களுக்கு, 96.26 மில்லியன் யூரோ, மலேசிய மதிப்பில் 451 மில்லியன் ரிங்கிட், மறைமுக இழப்பீடாக கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








