குவாந்தன்,செப்டம்பர் 21-
நாட்டின் பிரதான சுற்றுலா வாசஸ்தலமான கேமரன் மலை, பிரிஞ்சாங்- கில் இன்று சனிக்கிழமை நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததுடன், மின்சாரக் கம்பம் சாய்ந்ததில் வாகனம் சேதமுற்றது.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் ஜாலான் பெசார் பிரிஞ்சாங் – Kea Farm- மில் நிகழ்ந்தது.
எனினும் அதிர்ஷடவசமாக உயிருடன் சேதம் எதுவும் நிகழவில்லை என்று கேமரன்மலை போலீஸ் தலைவர் துணை சுப்பீரின்டெண்டென் அஸ்ரய் ராம்லி தெரிவித்தார்.
இந்த நிலச்சரிவு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
மின்சாரக் கம்பம் சாய்ந்ததில் Perodua Myvi கார் ஒன்று கடுமையாக சேதமுற்றது. இன்று சனிக்கிழமை அதிகமான சுற்றுப்பயணிகள் கேமரன்மலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஜாலான் பெசார் பிரிஞ்சாங் – Kea Farm- மில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதை தனா ரதா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங் உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் பொது மக்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கேமரன்மலை மாவட்ட நில அலுவலகம், தீயணைப்பு, மீட்புப்படையினர், போலீசார் மற்றும் பொது தற்காப்பு படையினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து ஜாலன் குணங் பிரிஞ்சாங் சாலையின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சீரமைப்புப்பணிகள் துரித வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் குவிந்து கிடக்கும் மண் அகற்றப்பட்டு வருகிறது.








