கோலாலம்பூர், டிசம்பர்.07-
நிலுவையில் உள்ள கூடுதல் வரி வசூல் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக மேலும் 2 பில்லியன் ரிங்கிட் நிதியைச் சேர்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த ஒதுக்கீடு 4 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. வரிப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மக்கள், குறிப்பாகச் சிறு வணிகர்கள் சிரமப்படுவதைத் தவிர்க்க இது ஒரு உடனடி நடவடிக்கை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எந்தக் காரணத்திற்காகவும் அரசாங்கம் மக்களிடம் கடன்பட்டிருக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், நிலுவையில் உள்ள பழைய தொகையை விரைவாகத் தீர்க்க இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அரசாங்கத்தின் இலக்கவியல் மாற்றத்தை ஆதரிக்கும் அதே வேளையில், சிறு வணிகர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இ-இன்வோய்ஸ் முறையின் கட்டாய வரம்பு 500 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 1 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.








