தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்கு தமிழ் பேசக்கூடிய மூன்று துணை அமைச்சர்களில் ஒருவர், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸெம், இன்று அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன், சுங்கை பூலோ எம்.பி. டத்தோ ஆர். ரமணன் மற்றும் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் தற்போது துணை அமைச்சர்களாக அன்வாரின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
அமைச்சரவைக்கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போதிலும் இந்த மூன்று துணை அமைச்சர்களில் ஒருவரை அமைச்சரவைக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பது மூலம் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ் நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பில் இந்திய சமூகத்தில் நிலவி வரும் அச்சத்தை போக்க முடியும் என்று அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.
குறிப்பாக தமிழ் நலன் சார்ந்த விவகாரங்களில் எழக்கூடிய பிரச்னைகளுக்கு துணை அமைச்சர் என்ற முறையில் அவர்களால் உரிய பரிந்துரையையும், விளக்கத்தயும் அமைச்சரவைக்கு அளிக்க முடியும் என்று பிஎஸெம்கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருள்செல்வன் பரிந்துரை செய்துள்ளார்.








