நவ. 27-
பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மாணவர்களின் மனநலத்தையும் மன அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும் என்று சரவாக் கல்வி, புத்தாக்கம், திறன் மேம்பாட்டு அமைச்சர் Datuk Seri Roland Sagah Wee Inn கூறியுள்ளார். மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கு தேர்வுகள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சரவாக் மாநிலத்தில், அடுத்த ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் இருமொழி கல்வித் திட்டத்தின் செயல்பாட்டை மதிப்பிட உதவும் என்று அவர் கூறினார். இது ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து வேறுபட்டிருந்தாலும், மாணவர்கள் எஸ்.பி.எம் போன்ற பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க அவசியம் என்று அவர் கூறினார்.
இந்த மதிப்பீட்டுத் தேர்வு மூலம், மாணவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முடியும். இஃது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மாணவர்களின் முன்னேற்றத்தை அறிய உதவும் என விளக்கமளித்தார்.
முன்னதாக, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேர்வு முறைக் கல்வியை நீக்கியுள்ளதாக ஒற்றுமை அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் Fadhlina Sidek கூறி இருந்தார். இருப்பினும், சரவாக் மாநிலம், எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிப்பீட்டுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய மூன்று முக்கிய பாடங்களில் மட்டுமே நடத்தப்படும்.








