கோலாலம்பூர், நவ. 19-
2020 ஆம் ஆண்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரையில் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 6 ஆயிரத்து 646 போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
இதில் 613 போலீஸ்காரர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 120 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். 68 பேர் சம்பளம் குறைக்கப்பட்டனர். 641 பேர் சம்பள உயர்வு கட்டுப்படுத்தப்பட்டனர் 152 பேர் சம்பள நகர்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை ஐஜிபி விளக்கினார்.
நேர்மையற்றப் போக்கு, குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடுதல், லஞ்ச ஊழல் மற்றும் போதைப்பொருள் பழக்கம் முதலிய காரணங்களினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அயோப் கான் தெளிவுடுத்தினார்.
போலீஸ் படைத் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு தவறான செயல்களில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள், எத்தகைய பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அயோப் கான் பரிந்துரை செய்துள்ளார்.








