கோலாலம்பூர், மார்ச்.02-
நாட்டில் தகுதியுள்ள 16.5 மில்லியன் மக்களில் சுமார் 14.8 மில்லியன் பேர், அதாவது 88 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரோன்95 பெட்ரோலை ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட் என்ற மானிய விலையில் பெற்றுள்ளதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின்படி, 12.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விற்பனை அல்லது 6.46 பில்லியன் லிட்டர் பெட்ரோல் பயன்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது.
இன்று நாடாளுமன்ற மேலவைக் கூட்டத்தில் மன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான அமைச்சின் பதில் உரையின் போது பேசிய அமீர் ஹம்ஸா பூடி95 திட்டமானது மைகாட் (MyKad) முறையின் மூலம் மிக எளிதாகவும், நிலைத்தன்மையுடனும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை இது காட்டுவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, வெளிநாட்டினர் இந்த மானியத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்து, உண்மையான மலேசியர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைப்பதை உறுதிச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் விளக்கினார்.








