கோலாலம்பூர், ஜூலை.16-
ஹாங்காங்கில் 3 கிலோ கிராம் கஞ்சா மொட்டுகளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய மலேசிய இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதை மலேசிய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், இந்த கைது தொடர்பாக ஹாங்காங் அதிகாரிகள் மலேசிய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர் சரவாக்கைச் சேர்ந்த 19 வயது மலேசியர் என்றும், மலேசியாவில் அவருக்கு இதற்கு முன்பு எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இளைஞர் கடந்த ஜூலை 9-ஆம் தேதி ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் சென்ற போது, அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா மொட்டுகளை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் என்றும் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.








