கோலாலம்பூர், ஜூலை.16-
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ் திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 13-ஆம் தேதி வரை மொத்தம் 36 ஆயிரத்து 928 கடப்பிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள், 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களைத் தேர்வு செய்யலாம்.
5 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழின் கட்டணம் 200 ரிங்கிட் என்றும், 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழின் கட்டணம் 350 ரிங்கிட் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban கூறுகையில், இதுவரை வழங்கப்பட்ட கடப்பிதழ்களில் 23 ஆயிரத்து 491, ஐந்தாண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களும், 13 ஆயிரத்து 437, பத்து ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய திட்டத்திற்கான தேவை சற்றே அதிகரித்திருந்தாலும், கடப்பிதழ் வழங்கும் பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








