ஷா ஆலாம், பிப்ரவரி.09-
செத்தியா ஆலாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் உறவினர் ஒருவர் அளித்த தகவலின் படி, போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.
நேற்று அவ்வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறை ஒன்றில் இருந்து இறந்தவர்களின் சடலங்களானது மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அவ்வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் குற்றச்செயல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று ரம்சே எம்போல் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சடலங்களில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலங்கள் சவப் பரிசோதனைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ரம்சே எம்போல் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








