மாண்டின் அருகிலுள்ள தாமான் மாண்டின் பாரு பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அதனுள் சிக்கிக் கொண்ட பெண் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இரவு சுமார் 11.30 மணியளவில் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரருடன் வசித்து வந்த நிலையில், அவ்வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.
நேற்று இரவு 11.33 மணியளவில் பெறப்பட்ட அவசர அழைப்பின் படி ,நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், அடுத்த 5 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.
அப்போது சுமார் 54 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
மீட்பு பணிகளின் போது, அவ்வீட்டின் படுக்கையறையில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைப் பரிசோதித்த சுகாதார அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.








