புத்ராஜெயா,ஜன.11
லாட்டரி சீட்டில் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் சகத் தொழிலாளியை கழுத்து அறுத்து, நரபலி பூஜை கொடுத்த குற்றத்திற்காக முன்னாள் செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
A. Francis என்ற 52 வயதுடைய முன்னாள் தோட்டத் தொழிலாளிக்கு தெமர்லோ உயர் நீதிமன்றம், விதித்த மரணத் தண்டனையை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், 2023 ஆம் ஆண்டு மரணத் தண்டனையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்திற்கு ஏற்ப 35 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது.
சம்பந்தப்பட்ட நபர், பிடிபட்ட தினமாக 1994 ஆம் ஆண்டு ஆகட்ஸ்ட் 26 ஆம் தேதியிலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்நபர், கடந்த 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பகாங், தெமர்லோ மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாலான் கோலாலம்பூர்- குவாந்தான் - மெந்தாக்காப் சாலையில் கிம் ஸ்வி லியோங் தோட்டத்தில் ஒரு வங்காளதேசத் தொழிலாளியான அலி அஹ்மாட் முஹமாட் உல்லா என்பவரை நரப்பலி கொடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








