சாலையில் தினமும் 18 உயிர்கள் பலியாகும் நிலையில், 2030-க்குள் சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 6,537 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 66 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகள் எனத் தெரிவித்தார்.
மொத்த விபத்துகளில் மோட்டார் சைக்கிள்கள் 14 சதவீதம் மட்டுமே என்றாலும், உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களைச் சேர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அதிக ஆபத்துள்ள சாலைப் பயனர்களை இலக்காகக் கொண்டு, சாலை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாஹிட் கூறினார்.








