ஜார்ஜ்டவுன், ஜூன்.04
பினாங்கில் கடந்த ஓராண்டாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தண்ணீர் கட்டண உயர்வு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வணிகப் பயன்பாட்டாளர்களுக்கு அமல்படுத்தப்படும் என்று மாநில போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
மாதத்திற்கு 35 கன மீட்டர் அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தும் 82 விழுக்காடு குடும்பங்களுக்கு, இந்த மாற்றத்தால் மாதத்திற்குச் சராசரியாக 2 ரிங்கிட் 55 காசுகள் மட்டுமே கட்டணம் உயரும் என்றும், இந்த உயர்வுக்குப் பிறகும் மலேசியாவிலேயே பினாங்கில்தான் தண்ணீர் கட்டணம் மிகவும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான நீர் விநியோகத்தை உறுதிச் செய்யவும், உள்கட்டமைப்பு பராமரிப்பிற்காகவும் இக்கட்டண உயர்வு அவசியமாகிறது என பினாங்கு நீர் விநியோகக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கா. பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த உயர்விலிருந்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், பெரிய குடும்பங்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை 20 ரிங்கிட் கட்டணத் தள்ளுபடி பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








