கோலாலம்பூர், பிப்ரவரி.14-
சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் முக்கியச் சாலைகளில் இன்று சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் தகவல்படி, கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் உள்ள கெந்திங் செம்பா டோல் சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. அதே போல், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ரவாங் முதல் புக்கிட் பெருந்தோங் வரையிலும், ஸ்கூடாய் முதல் கூலாய் வரையிலும் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் ஏற்பட்ட தொடர் விபத்துகளும் இந்த மெதுவான போக்குவரத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைதளப் பக்கத்தின்படி, போர்ட்டிக்சன் – செனாவாங் சாலையின் 259. ஆவது கிலோமீட்டர், தாப்பா – கோப்பேங் சாலையின் 300.3 ஆவது கிலோமீட்டர் மற்றும் சுங்கை புவாயா - புக்கிட் பெருந்தோங் சாலையின் 429.4 ஆவது கிலோமீட்டர் ஆகிய இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் சுமார் 32.7 லட்சம் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் என நெடுஞ்சாலை வாரியம் முன்னதாகக் கணித்திருந்தது. இதில் சுமார் 22 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








