மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM வளாக நிலத்தில், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் ஓர் ஆலயம் குறித்து சிலாங்கூர் மாநில அரசு வழங்கவுள்ள வழிகாட்டுதல்களுக்காகப் பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே சிலாங்கூர் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த விவகாரமானது சிலாங்கூர் மாநிலத்தின் பௌத்த, கிறித்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மதங்களுக்கான சிறப்புக்குழுவான 'லிமாஸ்' அமைப்பின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே, மாநில அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் கருத்துகள் வந்த பிறகே பல்கலைக்கழகம் இது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கலை எவ்விதப் பதற்றமுமின்றி, மிகவும் கவனமாகவும் விரைவாகவும் பேசித் தீர்க்க விரும்புவதாக UKM நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், சமூகத்தில் தேவையற்ற குழப்பத்தையோ அல்லது பதற்றத்தையோ உருவாக்கும் வகையில் இந்த விவகாரம் குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.








