மதமாற்றம் மற்றும் குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் முகமது ரிதுவான் என்ற கே. பத்மநாபனின் நிதி விவரங்களை வழங்க ஊழியர் சேமநிதி வாரியமான EPF, மறுத்திருப்பது 'முட்டாள்தனமானது' என மூத்த வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் விமர்சித்துள்ளார்.
எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிதுவான், தனது 55 வயதில் EPF பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்த விவரங்களை போலீஸ் துறை கோரியிருந்தது. ஆனால், "உறுப்பினரின் அனுமதி இன்றி தகவல்களைத் தர முடியாது" என EPF மறுப்புத் தெரிவித்தது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர் நரான் சிங், "ஒரு நபர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிலையில், அவரது அந்தரங்க உரிமையைக் காரணம் காட்டித் தகவல்களை மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. போலீஸ் துறை அல்லது அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் மூலம் முறையான அழைப்பாணையை சமர்ப்பித்து இந்தத் தகவல்களைப் பெற முடியும்," என்றார்.
இந்திரா காந்தியின் தரப்பு வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன் மற்றும் சச்ப்ரீத்ராஜ் சிங் ஆகியோரும், 17 ஆண்டுகளாகியும் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கும், அரசு நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் உள்ள தாமதத்திற்கும் போலீஸ் துறை தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் குற்றம் சாட்டினர்.








