May 15, 2026
Thisaigal NewsYouTube
தூக்கிலிடப்பட்ட தட்சணாமூர்த்தி எங்களின் அன்பு மகன், அன்பு சகோதரன்: குடும்பத்தினர் உருக்கம்
தற்போதைய செய்திகள்

தூக்கிலிடப்பட்ட தட்சணாமூர்த்தி எங்களின் அன்பு மகன், அன்பு சகோதரன்: குடும்பத்தினர் உருக்கம்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.29-

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காக கடந்த வாரம் தூக்கிலிடப்பட்ட ஒரு மலேசியப் பிரஜையான கே. தட்சணாமூர்த்தியை, ஒரு மரணத் தண்டனைக் கைதியாக மக்கள் பார்த்தாலும் அவரின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை வரையில் அவர் அன்பான மகனாகவும், சகோதரனாகவும் இருந்துள்ளார் என்று குடும்பத்தினர் மிக உருக்கமாகக் கூறினர்.

தட்சணாமூர்த்தி, தனது கடைசி காலம் வரையில் தங்களுக்காகவே உறுதியாக நின்று, ஆதரவு வழங்கிய ஒரு சகோதரனாக இருந்துள்ளார் என்றும், எப்போதுமே குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பாங்கைக் கொண்டு இருந்தார் என்றும் அவரின் 37 வயது சகோதரி கே. லோகேஷ் தெரிவித்தார்.

குடும்பத்தை அதிகமாக நேசித்த ஒரு சகோதரனாகவே எங்கள் பார்வையில் அவர் இருக்கிறார் என்று லோகேஸ் குறிப்பிட்டார்.

“அவரது இறுதி நாட்களில் கூட, எங்களைச் சோகமாக இருக்க வேண்டாம் என்றும், கடவுள் துணை நிற்பார் என்றும் கேட்டுக் கொண்டதாக லோகேஸ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம், சனிக்கிழமை ஜோகூர், உலு திராம், கத்தோலிக்க கல்லறையில் நடைபெற்ற தட்சிணாமூர்த்தியின் இறுதிச் சடங்கின் போது செய்தியாளர்களிடம் லோகேஸ் இதனை கூறினார்.

இதனிடையே டேவிட் மார்ட்டின் என்றும் அழைக்கப்படும் 39 வயதான தட்சிணாமூர்த்தியை, தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாளான புதன்கிழமை, ஆகக் கடைசியாக சாங்கி சிறைச்சாலைக்குச் சென்று பார்த்த போது, அவர் எவ்வித சலனமின்றி அமைதியாகக் காணப்பட்டதாக அவரின் மைத்துனர் ஒருவர் கூறினார்.

தட்சணாமூர்த்தி எப்போதுமே மகிழ்ச்சியாகக் காணப்படக்கூடியவர். அன்றும் அப்படிதான் இருந்தார். அவர், தனது சோகத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக உடன் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். தம்மை நிம்மதியாகப் போக விடுங்கள் என்று மட்டுமே தெரிவித்ததாக அவரின் மைத்துனர் குறிப்பிட்டார்.

Related News