கோலாலம்பூர், பிப்ரவரி.27-
நாட்டில் கடந்த 2020 முதல் 2025 வரையிலான காலக் கட்டத்தில், போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 1,800-க்கும் மேற்பட்ட போலீஸ் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று பத்து பஹாட் எம்.பி. ஓன் அபு பாக்கார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த உள்துறை அமைச்சு இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
1952-ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,869 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 91 அதிகாரிகள் மற்றும் 1,778 இதர பணியாளர்கள் அடங்குவர்.
கைதானவர்களில் இதுவரை 958 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஞ்சிய வழக்குகள் 911 ஆகும். அவை தற்பொழுது புலனாய்வு விசாரணையிலோ, நீதிமன்ற விசாரணையிலோ அல்லது வேதியியல் மற்றும் நோயியல் அறிக்கைகளுக்காகவோ காத்திருப்பில் உள்ளன.
புக்கிட் அமானின் ஒருமைப்பாடு மற்றும் தர நிர்ணயத் துறை இந்த அதிகாரிகள் மீது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அவர்கள் மீது உள்நாட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.








