கோலாலம்பூர், பிப்ரவரி.01-
பாதுகாப்பான, திறமையான, மக்களுக்கு நெருக்கமான பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். மடானி அரசாங்கம் எப்போதும் பொதுச் சேவைகளின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தும் என்பதைத் தனது முகநூல் பதிவின் வாயிலாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். கோலாலம்பூர் முதல் ஜோகூர் பாரு வரையிலான கேடிஎம்பி நிறுவனத்தின் ETS 3 மின்சாரத் தொடர்வண்டி சேவையைப் பிரதமர் இன்று நேரில் பார்வையிட்டப் பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

பயணத்தின் வசதி, சீரான மேலாண்மை குறித்து பொதுமக்களிடமிருந்து நேர்மறையான கருத்துகள் கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த ETS 3 தொடர்வண்டி சேவை, கோலாலம்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான பயண நேரத்தை சுமார் நான்கரை மணி நேரமாகக் குறைத்துள்ளது. சாலை வழியாகப் பயணிக்கும் போது ஏற்படும் 5 முதல் 7 மணி நேரப் பயணத்துடன் ஒப்பிடுகையில், இந்தச் சேவை பயணிகளுக்குப் பெரும் கால விரயத்தைத் தவிர்க்க உதவுகிறது என அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.









