கோலாலம்பூர், டிச. 18-
தனது நிர்வாணப்படத்தை அனுப்பி வைத்து, சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்து வந்ததாக கூறப்படும் மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தாங்கள் தயாராக இருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட விரிவுரையாளரின் ஆபாச சேட்டை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை பிரதிநிதிக்கும் ஓர் அமைப்பிடமிருந்து புகாரையும் தாங்கள் பெற்றுள்ளதாக மலாயா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தற்போது போலீஸ் துறையின் விசாரணையில் இருப்பதால், அது குறித்து தாங்கள் மேலும் கருத்துரைக்க இயலாது. இருப்பினும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அந்த முன்னணி பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








