குவாந்தான், டிசம்பர்.24-
இன்று பிற்பகல் 2.40 மணியளவில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திலிருந்து 39 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்துள்ளார். பாலத்தின் மீது அந்த ஆடவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இன்ஜின் அணைக்கப்படாத நிலையில் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அவசர கால உதவிக்கு 999 ஐ அழைத்துள்ளனர்.
ஆற்றில் விழுந்த அந்த ஆடவர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட அந்த ஆடவர் உடனடியாக மருத்துவ உதவிக்காக அருகிலுள்ள தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த நபர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








