ஜெரம், சுங்கை பூலோ, சசரான் மீன்பிடி படகுத் துறையில் இந்தோனேசிய ஆடவர் ஒருவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 60.3 கிலோ ஷாபு மற்றும் எக்ஸ்டசி போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.
அந்த படகுத் துறையில் நபர் ஒருவரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை தொடர்பில் பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று பின்னிரவு 2.30 மணியளவில் போலீசார் அதிரடிச் சோதனையை மேற்கொண்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ரம்லி காசா கூறினார்.
போலீசார் அப்பகுதியை முற்றுகையிட்ட போது அந்த 21 வயது நபர் போதைப் பொருளை அண்டை நாட்டிற்கு அனுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக அவர் சொன்னார்.
அந்த படகுத்துறையின் அருகிலுள்ள புதரில் மேற்கொள்ளப்பட் சோதனையில் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 58.9 கிலோ ஷாபு போதைப் பொருள் 56 சீனத் தேயிலை பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும் 59,000 வெள்ளி மதிப்பிலான 1.4 கிலோ எடை கொண்ட 3,500 எக்ஸ்டசி போதை மாத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் பை ஒன்றும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்று ரம்லி காசா தெரிவித்தார்.








