மலேசியாவின் பல்லின சமூகக் கட்டமைப்பில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் இன, சமய நல்லிணக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில், தீவிர போக்குடைய சில நபர்கள், இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தூண்டுதல் நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
இத்தகைய தனிநபர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளும், ஆலயங்களுக்கு முன்னால் சட்டவிரோதக் கூட்டங்களை நடத்த விடுக்கப்படும் அறைகூவல்களும் நாட்டின் சகிப்புத்தன்மையைச் சீர்குலைக்கும் அபாயம் கொண்டவை. எனவே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இத்தகைய தூண்டுதல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.








