மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வது குறித்து விவாதிக்க, அனைத்து மாநில அரசுகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் அடுத்த வாரம் சிறப்புச் சந்திப்பு நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் மூலம் இந்த விளக்கக்கூட்டம் நடத்தப்படும். பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்றார் பிரதமர்.
இன்று புக்கிட் ஜெலுத்தோங் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "அண்டை நாடுகளைப் போல சிக்கலான சூழல் நமக்கு ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.
தற்போது வரை நாட்டில் எரிபொருள் பங்கீடு முறையோ அல்லது RON95 பெட்ரோல் விலையில் திடீர் உயர்வோ இல்லை. மே மாதம் வரை விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது, நிலைமை தினசரி கண்காணிக்கப்படுகிறது," என்றார்.








