புத்ராஜெயா, செப்டம்பர்.29-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியா, மும்பைக்கு கிப்பன் வகை குரங்கையும், இதர இரண்டு கொடி விலங்கினங்களையும் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, விமான நிலையத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு ஏஜென்சி நேற்று வெற்றிகரமாக முறியடித்தது.
20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அந்த மூன்று விலங்கினத்தையும் பயணப் பெட்டிக்குள் அடைத்து, மலேசியப் பிரஜை ஒருவர், மலேசிய ஏர்லைன்ஸ் MH 0194 விமானத்தில் கடத்துவதற்கு முயற்சி மேற்கொண்ட போது அதனை எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள், துல்லியமாகக் கண்டுபிடித்து, 46 வயதுடைய அந்த மலேசியப் பிரஜையைக் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட அந்த விலங்கினம், தேசிய வன விலங்கு பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், பிடிபட்ட நபர், 2008 ஆம் ஆண்டு அரிய விலங்கினம் மீதான அனைத்துலக வர்த்தகச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.








