இவ்வாண்டு இறுதிக்குள் பினாங்கு மாநிலத்திலுள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு குறிப்பிட்டார்.
அதன் முதற்கட்டமாக, ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்கனவே நிறைவடைந்து, தற்போது 9 மில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டு மாடி கட்டிட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அடுத்ததாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நின்று போன சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடப் பணிகள், தற்போது 12 மில்லியன் ரிங்கிட் செலவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளன. தொடர்ந்து, ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்திற்காக 12 ஏக்கர் நிலம் பரிந்துரையில் உள்ள நிலையில், இவ்விரண்டு பள்ளிகளின் அடிக்கல் நாட்டு விழாக்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டாயம் நடைபெறும் என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு உறுதியளித்தார்.
மேலும், பெர்மாத்தாங் திங்கி மற்றும் இராமகிருஷ்ணா ஆகிய இரு தமிழ்ப்பள்ளிகளும் தங்களின் பிரதான தேவையாகப் பள்ளி மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன. இதற்கான ஆலோசனைகளையும் சிறப்புக் குழு பெற்று வருகிறது என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் லிம் குவான் எங் முதன் முறையாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு 15 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்தார். அங்கு தொடங்கிய மேம்பாட்டு வேலைகளின் தொடர்ச்சியாக, தற்போது 2026 ஆம் ஆண்டில் முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் இந்த ஆண்டு மானியத்தை 25 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளார். இதனால் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகள் இன்னும் பல முன்னேற்றங்களை அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக சிறப்புக் குழுவின் துணைத் தலைவர் குமரன் கிருஷ்ணனுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு இதனைத் தெரிவித்தார்.








