மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரஜைகளுக்கு 30 நாள் விசா விலக்களிப்பை மலேசிய அரசாங்கம் வழங்கியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்களுக்கு இந்திய அரசாங்கம் விலக்களிப்பு வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியா, சீனா, சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள், வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து மலேசியாவிற்கு 30 நாள் விசா இன்றி சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
இந்திய சுற்றுப்பயணிகளுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ள இதேபோன்ற விசா விலக்களிப்பு சலுகையை தொப்புள்கொடி தொடர்புடைய நாடு என்று கூறிக்கொள்ளப்படும் இந்தியா மலேசியர்களுக்கு விசா விலக்களிப்பு சலுகையை வழங்குமா? என்று இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் வினவியுள்ளனர்.
தற்போது இந்தியாவிற்கு செல்வதற்கு மலேசியர்களுக்கு விசா கட்டணமாக ஒரு மாதத்திற்கு 110 வெள்ளியையும், ஒரு வருடத்திற்கு 250 வெள்ளியையும், 5 வருடத்திற்கு 450 வெள்ளியையும் இந்திய அரசாங்கம் விதித்து வருகிறது.
மலேசியாவிற்கு வருவதற்கு இந்திய சுற்றுப்பயணிகள், ஏஜெண்டு கட்டணம் உட்பட மலேசிய விசாவிற்கு குறைந்த பட்சம் 300 வெள்ளி வரை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து விசா கட்டண விலக்களிப்பை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. அதற்கு கைமாறாக, மலேசிய அரசாங்கமும் சீன சுற்றுப்பயணிகளுக்கு வரும் டிசம்பர் முதல் தேதி முதல் சீன சுற்றுப்பயணிகளுக்கு 30 நாட்களுக்கு விசா கட்டண விலக்களிப்பை வழங்கவிருக்கிறது.
இந்நிலையில் இந்தியப் பிரஜைகளுக்கு விசா கட்டண விலக்களிப்பை வழங்கியுள்ள மலேசிய அரசாங்கத்தைப் போல மலேசியப் பிரஜைகளுக்கும் விசா கட்டண விலக்களிப்பை இந்திய அரசாங்கம் வழங்குமா?என்ற கேள்வி எழுந்துள்ளது.








