கோலாலம்பூர், பிப்ரவரி.26-
தொழிலாளர் சேம நிதி வாரியமான ஈபிஎஃப்பின் 15 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான லாப ஈவு குறித்த அறிவிப்பு வரும் சனிக்கிழமை வெளியாக உள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, வழக்கமான கணக்கு மற்றும் ஷரியா கணக்கு ஆகிய இரண்டிற்கும் 6 விழுக்காடு முதல் 6.2 விழுக்காடு வரை லாப ஈவு அறிவிக்கப்பட சாத்தியம் உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு, இவ்விரு கணக்குகளுக்கும் வரலாற்றிலேயே முதன்முறையாக சமமாக 6.3 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது. எனினும் நிதி ஆய்வாளர்கள் 6.3 விழுக்காடு முதல் 6.7 விழுக்காடு வரை 2025 ஆம் ஆண்டுக்கான லாப ஈவு வழங்கப்படலாம் என்று கணித்திருந்தாலும், தற்போதைய நிலவரப்படி 6 விழுக்காடு முதல் 6.2 விழுக்காடு வரையிலான விகிதம் உறுதியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த லாப ஈவு விகிதம் கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருந்தாலும், நாட்டின் வணிக வங்கிகள் வழங்கும் நிலையான வைப்புத் தொகை வட்டி விகிதத்தை விட இது இருமடங்கு அதிகமாகும். இதன் காரணமாக, பல மலேசியர்கள் தங்களின் வங்கிச் சேமிப்பைத் திரும்பப் பெற்று, ஆண்டுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரிங்கிட் வரை ஈபிஎஃப் கணக்கில் சுயமாகச் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.








