அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ தமது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஷ்ரப் வாஜ்டி டசூக்கி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு வாஜ்டி டசூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பு வழங்க அம்னோ தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசியல் ஒத்துழைப்பும், நேர்மையும், கூட்டணிக் கட்சிகளிடையே பரஸ்பர நம்பிக்கை என்ற அடிப்படைக் கொள்கைகளின் படி அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் எதிர்வரும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் உட்பட எந்தத் தேர்தலிலும் தனது நிலைப்பாடு மற்றும் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் உரிமை அம்னோவுக்கு இருப்பதாக வாஜ்டி டசூக்கி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோகூர் மாநில அரசாங்கமானது கூட்டரசு மட்டத்தில் ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே பக்காத்தான் ஹராப்பான் கட்சிகள் இல்லாமல் அமைக்கப்பட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.
எனவே, மாநில அரசியல் சூழ்நிலைகளையும், உள்ளூர் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தேர்தல்களில் அம்னோ தனது சொந்த அணுகுமுறையை வகுக்கும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக வாஜ்டி டசூக்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஒற்றுமை அரசாங்கத்திற்கான தனது தற்போதைய ஆதரவை அம்னோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், எதிர்கால அரசியல் கூட்டணிகளுக்கான வாயில்களையும் திறந்தே வைத்துள்ளது தெரியவந்துள்ளது.








