அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, அவர்கள் வகித்திருந்த நான்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவிகளும் காலியாகிவிட்டதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்துள்ளார்.
தமக்கும், மாநில அரசுக்கும் அவர்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால், அவர்களின் பதவிகள் தானாகவே காலியாகும் என்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் அமினுடின் தெரிவித்துள்ளார்.
டத்தோ ஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ், டத்தோ இஸ்மாயில் லாசிம், டத்தோ முஸ்தபா நாகூர் மற்றும் டத்தோ முகமட் ஃபைசல் ரம்லி ஆகிய நால்வரின் பதவிகளும் காலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாநில அரசு வழக்கம்போல செயல்பட்டு, மக்களுக்கான திட்டங்கள், தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அமினுடின் உறுதியளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான சமஸ்தாபதயை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாக நேற்று அம்மாநில அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள், அமினுடின் ஹருனுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








