கோலாலம்பூர், மே.05-
டாமான்சாரா பெர்டானா பகுதியில் உள்ள கடைத் தெருவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 7 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து டாமான்சாரா போலீஸ் நிலையத்திலிருந்து குழுவொன்று சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுடின் மாமாட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கட்டிடத்தின் பக்கவாட்டுப் படிக்கட்டில் இரண்டு கத்திகளுடன் நின்றிருந்த நபரைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்ததாகவும் ஷம்சுடின் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








