கோலாலம்பூர், ஸ்தாபாக், தாமான் டானாவ் கோத்தா ஏரி பூங்காவில் அண்மையில் பெருமளவிலான மீன்கள் மடிந்து மிதந்ததற்குக் தொடர் கனமழையே காரணமாக இருக்கலாம் என கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் விளக்கம் அளித்துள்ளது.
கனமழை காரணமாக ஏரி நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததோடு, வடிகால்களில் இருந்து குப்பைகளும், அசுத்தங்களும் ஏரிக்குள் கலந்ததே இதற்கு காரணம் என ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஏரி ஒரு பொழுதுபோக்குத் தலம் மட்டுமல்லாமல், வெள்ளத் தடுப்புக் குளமாகவும் செயல்படுவதால், நகரின் பிற குளங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.
ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மடிந்த மீன்கள் உடனடியாக அகற்றப்பட்டு, ஏரிக்குள் குப்பைகள் நுழைவதைத் தடுக்கப் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் துறையினர் ஏரி நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று டிபிகேஎல் விளக்கம் அளித்துள்ளது.








