ஜோகூர், தம்போயில் உள்ள வீடு ஒன்றில் பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு திருமணமான தம்பதிகள் இன்று அதிகாலை 1:30 மணியளவில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 முதல் 34 வயதிற்குட்பட்ட இந்த நான்கு சந்தேக நபர்களும், தங்களின் முன்னாள் பணிப்பெண்களாக இருந்த மேலும் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இந்தோனேசிய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் அந்தப் பெண்கள் நேற்று ஜோகூர் பாரு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தோனேசிய தூதரகம் தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது. இந்த நான்கு சந்தேக நபர்களையும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.








