பொந்தியன்-இல் இயக்கத்தில் இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபரை, சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஜலான் தெலுக் கெராங் பகுதியில் கருப்பு நிற கார் ஒன்று, அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்டதாகப் புகார் கிடைத்ததாக, பொந்தியன் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரத் ஹுஸைன் பின் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அதிகாலை 2.45 மணியளவில், ஆயர் பாலோய் பகுதியில் உள்ள கம்போங் பாரிட் மொஹாயத் அருகே ஜலான் பாரிட் பஞ்சாங் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, காணாமல் போன கார் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்காரை செலுத்தி வந்த 44 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவர் ஏற்கனவே 5 போதை வழக்குகள் உட்பட 7 வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் தெரியவந்ததாகவும் ஹஸ்ரத் தெரிவித்துள்ளார்.








