கோலாலம்பூர், டிசம்பர்.14-
ஆண்களைக் காட்டிலும் பெண்களே 'காதல் மோசடி' கும்பலின் உணர்ச்சித் தூண்டுதலிலும் தந்திரமான வலைகளிலும் அதிகம் சிக்குவதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டத்தில் மட்டும், 977 காதல் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 43 மில்லியன் ரிங்கிட் வரை இழந்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை செய்வது போல் நடித்து, தனிப்பட்ட சந்திப்புகளையும் வீடியோ அழைப்புகளையும் தவிர்ப்பதன் மூலம், அவசரம் அல்லது சுங்கத் துறை சோதனையில் பரிசுப் பொருட்கள் சிக்கி விட்டதாகக் கூறி இந்த மோசடி கும்பல் பணத்தைப் பறிக்கிறது. எனவே, சமூக ஊடகங்களில் புதிதாக அறிமுகமான நபர்களை நம்பி உடனடியாகப் பணம் அனுப்புவதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களுக்குக் காவற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.








