கோலாலம்பூர், டிசம்பர்.18-
சன்வே ஸ்குவேர் மால் பேரங்காடி, தனது உட்புறப் பகுதிகளில் செல்லப் பிராணிகளை அனுமதிக்கும் கொள்கையை இன்று டிசம்பர் 18 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக மீட்டுக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் மாநில ஊராட்சிமன்ற மற்றும் சுற்றுலாத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சூ லிம், மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்களுக்குள் செல்லப் பிராணிகளை அழைத்து வரத் தடை நீடிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல், அந்த மாலில் உள்ள மூடிய உட்புறப் பகுதிகள் மற்றும் சில்லறை விற்பனைத் தளங்களுக்குள் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அந்தப் பேரங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், மாலுக்கு வெளியே அமைந்துள்ள Squarrel's Playground எனும் பூங்காவில் செல்லப் பிராணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அந்தப் பேரங்காடி வந்தது தொடர்பான காணொளி அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.








