டிச. 7-
முன்னாள் பிரதமரும், அம் னோ முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக அவரின் புதல்வர் டத்தோ நிஸார் நஜீப் முன்வைத்துள்ள அப்பிடெவிட் மனுவைத் தொடந்து இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அம்னோ சிறப்பு உச்சமன்றக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நஜீப் விவகாரத்தில் அரசாணை உத்தரவு இருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள சத்தியப் பிரமாண விவகாரத்தை சாதாரணமாக கருதி விட முடியாது. எனவே இதற்கு முன்னுரிமை அளித்து விவாதிப்பதற்கு அம்னோ சிறப்பு உச்சமன்றக்கூட்டம் கூட்டப்படுவது அவசியமானதாகும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Puad Zarkashi தெரிவித்துள்ளார்.
தமது தந்தை, வீட்டுக்காவலில் வைப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக நஜீப்பின் புதல்வர் நிஸார் நஜீப், தமது தந்தையின் மேல்முறையீட்டு வழக்கில் ஒரு புதிய ஆதாரமாக அப்பிடெவிட் மனு ஒன்றை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி சமர்ப்பித்ததைத் தொடர்ந்து Puad Zarkashi இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நஜீப் எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கு அவருக்கு இரண்டாவது அரசாணை உத்தரவை தாம் பிறப்பித்ததாக மேன்மை தங்கிய பகாங் சுல்தான் தம்மிடம் தெரிவித்தார் என்று நிஸார் நஜீப் தமது அப்பிடெவிட் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.








