கோலாலம்பூர், ஜனவரி.09-
மலேசியப் பெண்கள் வெளிநாடுகளில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம், நாட்டின் தாய்மார்களின் தன்னலமற்ற பங்களிப்பிற்கு அரசாங்கம் வழங்கிய மிக உயரிய அங்கீகாரம் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் லிம் ஹூய் யிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாகத் தந்தையர்களுக்கு மட்டுமே இருந்த இந்த உரிமை, தற்போது தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது மலேசியாவில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் ஒரு மிகப் பெரிய மைல்கல்லாகும் என்று துணை அமைச்சர் வர்ணித்தார்.
குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக எல்லைகளைக் கடந்து போராடும் மலேசியத் தாய்மார்களின் குரலுக்குக் கிடைத்த நீதி இது. பல ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டங்களுக்கு இந்த அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று லிம் ஹூய் யிங் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமை விவகாரத்தில் தாய்மார்கள் எதிர்கொண்ட நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மன உளைச்சல்கள் இனி நீங்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மலேசியக் குடும்பங்கள் பயனடையும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.








