புத்ராஜெயா, ஜனவரி.20-
மலேசியக் கல்வி முறையில் பெரும் விவாதத்திற்குள்ளான யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 பொதுத் தேர்வுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படாது என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்த போதிலும், பழைய தேர்வு முறைக்குத் திரும்பும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 'மலேசிய கற்றல் மெட்ரிக்ஸ்' என்ற புதிய மதிப்பீட்டு முறையே இனி பின்பற்றப்படும். இது மாணவர்களின் கற்றல் திறனை அளவிடப் போதுமானது என்று அவர் குறிப்பிட்டார்.
4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கற்றல் மெட்ரிக்ஸ் ஒரு கடுமையான 'பொதுத் தேர்வு' அல்ல. இது மாணவர்களின் அடைவு நிலையைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே என்பதால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அவர் கேட்டுக் கொண்டார்.








