கோலாலம்பூர், பிப்ரவரி.02-
பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச கொண்டாட்டங்களின் போது வியாபாரிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஷீலா நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஒருநாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட அவர், மீண்டும் விடுவிக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பத்துமலை கொண்டாட்டங்களின் போது இன்ஸ்பெக்டர் ஷீலாவின் செயலானது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்நடவடிக்கையானது எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மற்றொரு போலீஸ் அதிகாரியை அவமதித்ததாகவும், மூதாட்டி ஒருவரை மிரட்டியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஷீலா கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








