ஃபெல்டா நில விற்பனை மற்றும் கோலாலம்பூரில் திட்டம் ஒன்றிற்கு மேம்பாட்டாளரை நியமித்ததில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஃபெல்டாவின் முன்னாள் தலைமை நிர்வாகி ஒருவர் 5 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இன்று செப்டம்பர் 7 முதல் 11-ஆம் தேதி வரை, அவருக்கான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் எஸ்ரின் ஸாகாரியா பிறப்பித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 16-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வழக்கில் ஃபெல்டாவின் முன்னாள் தலைமை மேலாளர் உட்பட இருவர், ஃபெல்டாவுக்குச் சொந்தமான நிலத்தை அதன் இயக்குநர்கள் குழு மற்றும் துணை நிறுவனத்துக்குத் தெரியாமல், மேம்பாட்டாளர் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனிடையே, ‘ஓப்ஸ் ஃபெல்லா” எனப்படும் சிறப்பு விசாரணையின் கீழ் ஃபெல்டா மற்றும் ஃஎப்ஐசி (FIC) நிறுவனங்களின் முதலீடுகள், சொத்து கையகப்படுத்தல்கள் மற்றும் கேஎல்விசி (KLVC) திட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.








