ஈப்போ ஜாலான் சுங்கை, புந்தோங் பகுதியில், புஞ்சாக் எமாஸ் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், அவ்வீட்டில் வசித்து வரும் விரோனிக்கா ராஜரத்தினமும், அவரது 14 வயது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இரு பிள்ளைகளுக்குத் தாயான விரோனிக்கா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில், இச்சம்பவம் அவரை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த விபத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது.
இதனிடையே, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த புந்தோங் சிறார் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் பெ. யுவராஜ், தாயும் மகனும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகத் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான சட்டரீதியான உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








